விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் – 2

சில மாதங்கள் முன் ந.பிச்சமூர்த்தியின், ‘சுமைதாங்கி’ என்ற கவிதையை வாசித்தேன்.அது, இப்போது தான் எனக்கு புரிகின்றது. ஞானம் தான் எத்தனை பெரிய சுமை! அதை இறக்கி வைத்துவிட்டு நம்மால் தொடர முடியுமா? ஒரு சிறுவனின் நேர்மையான ஞானத் தேடலுடன் தொடங்குகிறது ‘கௌஸ்துப’ காண்டம். சுடுகாட்டு சித்தன் அவனில் தன் சிஷ்யனையும், சிறுவன் சித்தனில் குருவையும் கண்டடைகிறார்கள்.காசியபன் என்று தன் சீடனுக்கு பெயர் சூட்டி சித்தன், அவனுக்கு அளிக்கும் முதல் பாடம், ‘அறியக்கூடியவற்றை அறிந்துவிட்டு, உன் அடையாளத்தை தகர்த்துக்கொண்டு விடு.அடையாளங்கள், உன்னை நிரந்தரத்திலிருந்து நிரந்தமின்மைக்கு தள்ளிவிடும்’.இதுவே, பின்னர், விஷ்ணுபுரம் ஞான சபையில் மகா அஜிதராலும் விளக்கப் படுகிறது.நாம் காணும், உணரும் அனைத்துமே மாறிக்கொண்டே இருப்பவை.அடையாளமற்று இருத்தலே மாற்றத்திற்கு தன்னை தயார் செய்துகொள்வதாகும். ஞானசபையின் எல்லா தரப்புகளையும் வாசித்திவிட்டு, அஜிதரின் இந்த விளக்கம் வரும் கணம், ஒரு வித நிம்மதி பரவுகிறது.வேண்டாம், இத்தனை ஞானத் தருக்கங்களையும் நான் சுமக்க வேண்டாம். அவற்றை என்னுடையதாக நான் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த கணமே, என் அடையாளமும் உடைகிறது. சமூகம் எனக்கு அளிக்கும் குழு அடையாளங்கள். எத்தனை பெரிய விடுதலை.

ஆனால், முழுமையாக ஞானத்தை துறந்துவிட்டு முன் செல்ல முடியுமா? வைதிகத்தின் ஞான தேடல் உண்மையில், சுய மையத் தேடலாக இருப்பதை சுட்டிதான், அஜிதர் பவதத்தரை வாதத்தில் வெல்கிறார். காலம் என்பதை மாற்றங்களின் தொடர் சங்கிலியெங்கிறார்.நாம் அறியக்கூடியது எல்லாம் காலம் ஒன்றையே என்கிறார். ஞானம் என்பதை அனைத்து பொருள்களின் இயல்புகளைப் பற்றிய விழிப்புணர்ச்சி என்று கொண்டால், அது அத்தனை கணமானதாக இருக்க முடியாது. அது, நம் சுய தர்மைத்தை கண்டுகொண்டு நிறைவுடன் செயலாற்றுவதற்கான மார்க்கமாக அமையக்கூடும். அஜிதர், வாதத்தில் வென்று திரும்பும் சமயம், பல வருடங்களாக விஷ்ணுபுரம் கோயிலில் மணி அடித்துக்கொண்டிருந்த அங்காரகன் எனும் யானையும், மனிதர்கள் தன் மீது ஏற்றிய மனித அடையாளங்களை உதரிக்கொண்டு காட்டினுள் ஓடி சென்று, தன் சுய இயல்பை மீட்டுக் கொள்கிறது.ஒளி விடும் மரமான, மிருக நயனியின் நிழலில் அஜிதர் தியானித்து திரும்பும் போது, அங்காரகன் அங்கு வருகிறது. மரத்தை தடவிப் பார்க்கும் அங்காரகனும், அதனுடன் சேர்ந்து ஒளிர்கிறது. ஞானசபையை வென்ற மறுகணமே, அறிதல் சொற்களாலானது அல்ல என்று உணர்ந்து, பெரும் சலிப்பிற்கு ஆட்படுகிறார் அஜிதர். அறிதல் என்றுமே உபதேசிக்க முடியாத ஒன்றல்லவா? ஒரு வேளை அஜிதருக்கே, விவாதம் முடிந்த பின் தான், தனக்கான அறிதல் நிகழ்ந்ததோ? தான் அறியக்கூடிய காலமும் இன்மையே என அனைத்தையும் துறந்துவிட்டாரா? சொல் மௌனத்திற்கு திரும்புவது போல!!

மனிதன் பதருவது எதற்காக? மரணம்? நான் இருப்பதும் இல்லாமலிருப்பதும், இந்த உலகிற்கு ஒரு பொருட்டல்ல என்ற அறிதலின் பதட்டம்? தன்னுடைய ஞான குரு, தன் இறுதி கட்டத்தில் வலியில் துடித்து இறப்பதைப் பார்த்து அவரை விலகிய லாமா, தன் சீடர்களை ஆரோக்கியசாலிகளாக பழக்குகிறார். தம் உடலை கடும் பயிற்ச்சிக்கு உட்படுத்தி பலசாலியாக இருக்கிறார். ஆனால், நடக்கையில், தென்னை மரத்திலிருந்து தேங்காய் தலையில் விழுந்து, இறந்துவிடுகிறார். இதை வாழ்வின் அங்கதமாக பார்ப்பதன் மூலம் தன்னை ஒரு ஞானத்தில் ஒரு படி உயர்ந்தவனாக தன்னை சந்திரகீர்த்தி எண்ணிக்கொள்கிறான். அஜிதரோ, ‘அப்படியா, நல்ல மனிதராயிற்றே’ என சிறு வருத்தத்துடன் முடித்து விடுகிறார்.
உண்மையில் எது தான் ஞானம் என்பதிலேயே நமக்கு பல குழப்பங்கள் இருக்கின்றன. சிந்தனை என்பதே எளிமையின் மறுமுனையில் துவங்குகிறது.

விஷ்ணுபுரம் ஞான சபையில் விவாதிக்கப் படும் அத்தனை தரப்புகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தனை சொல்லாடல்களையும் தொடர முடியவில்லை. மீண்டும் பல முறை படிக்க வேண்டும்.

Posted in Uncategorized | Leave a comment

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் – 1

புத்தகத்தை வாங்கி வைத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.இடைவிடாத வாசிப்பு இருக்க வேண்டுமெனவும், அதற்கான நேரம் வர வேண்டுமெனவும், தினமும் அதை பார்த்துவிட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வதுண்டு.கடந்த வாரம், ஒரு நாள், மனதின் குழப்ப தேவதை கனவில் வந்து தொடங்கலாம் என ஆசி தந்த பிறகு வாசிக்க எடுத்தேன். வாசிப்பை நிறுத்த முடியவில்லை.ஆனால், உள்வாங்கி அசைபோடுதற்கான இடைவெளி மிகவும் அவசியமானது.ஒரு காவியம் தொட்டு செல்லும் கவிகணங்கள்தான் எத்தனை! ஒரு விவரணையில் ஒரு செயலில் ஒரு கவிதையை விட்டு செல்கிறார். இந்த படிமத்திற்காக, எத்தனை தவமிருந்து அதை ஒரு சிறு துளியென சேர்த்துக்கொண்டிருக்கிறேன் என்று யோசித்தால், போதும் இந்த அற்ப பிரயாசை என்று தோன்றிவிடுகிறது.மனக்கண்கள் விழிப்பாக இல்லையென்றால், விஷ்ணுபுரத்தினுள் நுழைவது பிரயாசையாகத்தான் இருக்கும். விஷ்ணுபுரம் காட்டப்படுகிறது, நம்மால், அதன் நதிக்கரை காற்றை உணரமுடியுமளவு. காட்சி அடுக்குகளாகவே கதை எடுத்துசெல்லப்படுகிறது. ஒவ்வொரு காட்சியும் சொல்லப்படாத ஒன்றின் மௌனத்துடன் மறைகிறது. மீண்டும் வேறு காட்சிகளில் அதன் முடிவு சொல்லப்பட்டு நீள்கிறது. நம் கண்முன் நெய்யப்படும் கம்பளம் போல விரிகிறது.ஒருவகையில், இலக்கியத்தின் எல்லைகளை மீறி சினிமாவாகவும், சினிமாவால் என்றைக்குமே முழுமையாக சுவீகரிக்க முடியாத இலக்கியமாகவும். உயிரூட்டமான ஒரு காட்சியில் நீளும் மனபிரவாகமென.

ஸ்ரீபாத பாகம் இன்று தான் வாசித்து முடித்தேன். அதற்கிடையில், எண்ணங்களை கொஞ்சம் தொகுத்துக்கொள்ளலாம் என எழுதுகிறேன்.

முன்னுரையில் ஜெ குறிப்பிட்டிருப்பதுபோல, இந்நாவலின் எந்த ஒரு கதாபாத்திரத்தின் தரப்பும் வலியுறுத்தப்படவில்லை.ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே தொடர்ந்து செல்வோமானல், அது நம்மை தவறாகவே இட்டு செல்லும். இது, நம் அனைத்து சிந்தனைகளையும், மரபுகளையும், சித்தாந்தங்களையும் சற்று விலகி நின்று பார்ப்பதற்கான வாய்ப்பு. ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்றொன்றுடன் முரண்படும் போதும் மோதும்போதும் நமக்கு வாய்க்கும் கேள்விகளே, நாம் இதிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியது. உதாரணமாக, பிங்கலன் வனத்தில், புத்த ஸ்தூபியில், சந்திக்கும் புத்த பிக்கு. இயற்கையுடன் இயல்பாக வாழ்ந்துகொண்டிருப்பவர்.தினமும் அங்கு வந்து விளக்கு ஏற்றி விட்டு போவது மட்டுமே வாழ்க்கையின் நெறியாக கொண்டவர். அதில், அமைதியும் நிறைவும் காண்பவர். பிங்கலனால் நம்பமுடியாத, தாங்கவொண்ணாத வாழ்வு அது. ஆனால், அவனுடைய தேடலும் அவனை எதுவரை கொண்டு செல்லக் கூடும்? மனிதன் ஏன் பிறந்தான்? எதற்காக வாழ்கிறான்? இவையெல்லாம் விடையில்லாத கேள்விகள் என்பது தான் தேடலின் கண்டடைதலா? வேறு என்ன இருக்க முடியும்? ஆனால், அந்த பிக்குவின் அத்தகைய வாழ்க்கையும் ஒரு தேடலுடன் தானே தொடங்கியிருக்கும்? அல்லது, அப்படி தொடங்கியிருக்காவிட்டால், அதன் தரம் குறைந்துவிடுமா? “சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்று, அதனால் தான் சொல்கிறோமா? ஆனால், நம் தேடல் நம்மை அங்குதான் கொண்டு சேர்க்க முடியும் இல்லையா? நாமும் நம் விளக்கை தினமும் ஏற்றி வைக்க வேண்டும். அதை மட்டுமே செய்யவும் முடியும். அத்தனை பெரிய காவியம் படைத்த சங்கர்ஷணனே மீண்டும் தன் அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவதல்லாது வேறு கதியற்றவனாகிறான். யாருக்காக அவன் தன் காவியத்தை படைத்தான்? அவனையன்றி பிறருக்கென அவன் காவியம் படைக்கவும் தான் முடியுமா? பின், எதனால் அந்த ஏமாற்றம்? கவிஞனால் எந்த ஒரு பெண்ணிலும் நிறைவைக் காணமுடியாது என்பது போல, அவனால் எத்தகைய வாழ்விலும் நிறைவை காண முடியாது என்று தோன்றுகிறது.

மனிதனை இந்த வெறுமையிலிருந்து மீட்கவே, நம் மரபில் எத்தனை மார்க்கங்களும் இலட்சியவாதங்களும். இருந்தும் அவையெல்லாம் வெறும் சிந்தனை வெளிகளாக மட்டுமே இருந்துவிட்டன. தனி மனிதர்களின் சிந்தனைகள்.அவர்களின் தேடல்களால் உருவான சிந்தனைகள்.அவற்றால், எல்லாருக்குமான நியதியாக மாற முடியாது. அதனால்தான், நம் சமூகம் எத்தனை எத்தனை சிந்தனைகளையும் மீறி, ஒரு உன்னதமான சமூகமாக இருந்ததேயில்லை.

ஸ்ரீபாதம் மட்டுமே பார்க்க இத்தனை பிரமாண்டமாக இருக்கும்போது, விஷ்ணுபுரத்தின் முழு தரிசனம் கிடைத்ததும், சொல்ல வார்த்தைகள் இருக்குமா என தெரியவில்லை.

Posted in Books, Jeyamohan, Philosophy, poetry | Leave a comment

அழகர் சாமியின் குதிரை

அழகர் சாமியின் குதிரையை போலவே, அந்த திரைப்படமும் எங்கள் ஊரை விட்டு ஓடிவிட்டது என்று நினைத்து வருத்தபட்டு ஒரு வாரம் கழித்து மீண்டும் நான் ஊர் திரும்பிய போது, அப்பா அதை கண்டு ‘பிடித்து’ வைத்திருந்தார்.எங்கள் ஊரிலும் மல்டிப்ளெக்ஸ் எல்லாம் வந்து வருடம் பல ஓடிவிட்டது.மற்ற தியேட்டர்களையெல்லாம் மறந்தும் விட்டோம்.நேரில் போய் டிக்கேட் வாங்குவதில்லாம் தொன் மரபாகிவிட்டது.அப்படி ஒரு சிறிய தியேட்டரில் படம் இளைப்பாறிக் கொண்டிருப்பது அறிந்து, அது ஓடுவதற்குள் பிடித்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் நேற்று மாலையே அடித்து பிடித்து மாலைக் காட்சிக்கு சென்று மூச்சிரைக்க 6:29 கு தியேட்டருக்குள் நுழைந்தோம்.ஒரே ஒரு கார் மட்டும் உள்ளே நின்றிருந்தது.அட்களே இல்லை.பதறி போய், காட்சி ஆரம்பித்துவிட்டதோ என்று அங்கிருந்த பெரியவரைக் கேட்டோம்.பார்கின் டிக்கெட் விற்பவர்.6 30 மணிக்குத் தாங்க படம் என்றார்.எதுக்கும் ஒரு முறை புரியாமல் கை கடிகாரத்தைப் பார்த்து முழித்தோம்.ஆளே இல்லாத டிக்கெட் கௌண்டர் உள் செல்லலாம் என்றார்.அதிகபட்சம் முப்பது ரூபாய்க்குத் தான் டிக்கெட் தருவார்களாம்.அது முதல் வகுப்பு டிக்கெட்.நாங்கள் நுழைந்தது, பின்னால் ஒருவர் தொடர்வது கண்டு, வரிசை சேர்வது போல நினைத்தேன்.அவர் எங்களை கடந்து, டிக்கெட் கவுண்டரைக் கடந்து தியேட்டர் காண்டீன் கவுண்டருக்கு சென்றுவிட்டார்.

பரந்து விரிந்த தியேட்டருக்குள், பத்துபேர் அமர்ந்திருந்ததே ஆறுதலாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.எல்லாம் ஒரே சமமான தரை.நல்ல மின் விசிறிக் காற்றடியில் அமர்ந்தோம்.மெதுவாக இன்னும் இரண்டு மூன்று பேர் நுழந்தார்கள்.அங்கு வந்திருந்தவர்கள் ஏன் அங்கு வந்திருப்பார்கள் என்பதை சுற்றியே ஒவ்வொரு படம் எடுத்துவிடலாம் என்று தோன்றியது.ஒருவர் ஒரு உருண்ட அடைக்கப்பட்ட தோள் பையுடன் வந்திருந்தார்.ஒன்று இரண்டு குடும்பங்கள் வந்திருந்தன.சம்கி புடவையும், கையில் பையுமாக.நாங்கள் அமர்ந்திருந்த பாடத்திலேயே மொத்தம் நாங்கு பேர் தான்.பத்து ரூபாய் டிக்கெட் வரிசையில் ஒரு பத்து பதினைந்து பேர்.என்ன இருந்தாலும், விளக்குகள் அணைந்து திரை ஒளிரும்போது ஏற்படும் பரவசம் என்றும் குறையாதது.ஒரு காலப் பயணத்திற்கு தயாராவது போல.இன்னொருவரின் கனவிற்குள் நுழவது போல.அதில் தான் ஒரு சிங்கத்தின் பழிவாங்கும் கதையிலிருந்து தூர கிரகங்களில் அட்டூழ்யம் செய்த்த பூச்சிகள் வரை எத்தனை உலகங்கள். படத்திற்கு முன் அதிகம் விளம்பரங்கள் இல்லை.யாரும் படத்தை அலைபேசியிலோ கை காமிராவிலோ பதிவு செய்யக் கூடாது என்ற எச்சரிக்கை அறிக்கைப் பார்த்தபோது தான், இப்படி காலியான தியேட்டர்களில் அதன் வாய்ப்புகள் எத்தனை பிரகாசம் என்று தோன்றியது.

பின் படம் தொடங்கியது.முதலிலேயே பெயர் பட்டியல் போட்டுவிட்டார்கள்.படத்தின் பெயரை தமிழில் ஒருமுறை ஆங்கிலத்தில் ஒருமுறை என்றெல்லாம் போடவில்லை.டைட்டிலில் எழுத்துரு வடிவமைப்பே, அது எத்தனைப் பாசத்துடன் எடுக்கப் பட்டிருகின்றது என்பதை சொல்வது போல் இருந்தது.இனிமையான இசை.நான் வாழ்கையில் நேரடியாக பார்த்த ஒரே கிராம பகுதி ஆண்டிப்பட்டி.என் கல்லூரி தோழியின் வீட்டிற்கு நாங்களெல்லாம் சென்ற போது.இமைகள் மூடாது அந்த பசுமையை விழுங்கிக் கொண்டே இருக்கலாம்.படமும் தேனி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம்.அப்பா, இதன் மூலக் கதையை வாசித்திருந்தார்.எனக்கு ஆர் கே நாராயணனின் ‘கிழவனும் இரு ஆடுகளும்’ என்ற கதை தான் நினைவிற்கு வந்தது.கடைசியாக, ‘லகான்’ படத்தில் தான் ஒரு முழு கிராமமும் அதன் வாசிகளும் மிகுந்த சிரத்தையுடன் மறு ஆக்கம் செய்யப்பட்டிருந்தார்கள்.ஆனால், இப்படம் ஒரு வாழும் கிராமத்திலேயே எடுக்கப் பட்டது.கிராமங்களைப் பற்றிய ஒரு உணர்ச்சிகரமான சார்பு நிலை இல்லாமல், இயல்பான சித்தரிப்பு.அதனால தான் படம் முழுவதுமாக ரசிக்கக் கூடிய நகைச்சுவை இருந்தது.கதை எழுதிய பாஸ்கர் சக்தி அவர்களே இதன் திரைக்கதையும் வசனமும் எழுதியிருக்கிறார்.

ஒவ்வொரு கதைபாத்திரமும் நேர்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது.ஊர் மதிப்பிற்குரிய வாத்தியாரைய்யாவும் போலீஸ் ஸ்டேஷனில் வந்து ஊர் சிற்றிப் பார்க்க வந்த வெள்ளைக்காரர்கள் தான் குதிரையை திருடுயிருக்க வேண்டும் என்று சொல்லும்போது, கதையின் களன் அழகாக விரிந்தது.குதிரையைத் தேடி வரும் அழகர்சாமி கதையிலிருந்து குதித்து நடமாடுவது போலவே இருந்தது.இதமான இசை.இன்னும் கொஞ்சங்கூட கிராமத்திய வாடையுடன் எல்லா பாடல்களும் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.அதிகம் இசை ஞானம் இல்லாததால், இதைப் பற்றி என்னிடம் அதிக வாதம் இல்லை.ஒரு வேளை படத்தின் காமிக் உயிரோட்டத்திற்கு ஏற்ப மரபாக அப்படி அமைக்கப் பட்டிருக்கிறது போலும்.

சிறுகதையின் இறுதி திருப்பம் க்ளாசிக்காக இருந்தது.ஆனால், அதை படிக்கும்போது ஏற்பட்டிருக்கக் கூடிய தாக்கம் இன்னும் நீடித்ததாக இருந்திருக்கும்.படமாக மாறும் தோரும் அதன் மொழிபெயர்ப்பு வேறு சில நுட்பங்களைக் கோருகின்றது என்று நினைக்கிறேன்.அதற்க்கு அடுத்த, பிரஸிடெண்ட் அய்யா சாபமிட்டு சரிந்ததும் பெய்யும் மழை ஒரு க்ளாசிக் சினிமா தருணம்.வேவி பார்க்க நியமிக்கப்பட்ட போலீஸ் ஊர் பூசாரியாக பிழைப்பை மாற்றிக்கொள்வது, ஊர் பெரியவர்கள் உள்ளூர் கோடங்கியை அசிங்கப்படுத்துவது,பிரஸிடண்ட் அய்யாவன் மகன் நாத்திகனாக இருப்பது,ஊர் திருவிழா வசூல், குதிரை இறுதியில் எல்லோருக்கும் தண்டனை தன் போக்கில் தந்து ஓடுவது என்று எல்லாமே அலாதியான இலக்கிய அனுபவம்.

கிராமத்தின் மூட நம்பிக்கைகளும், வறுமையும் நல்ல நகைச்சுவைக் களமாக இருந்தாலும், அது கிராம வாழ்க்கையை ரொமாண்டிஸைஸ் செய்யவில்லை, அதே சமயம் வெளிப்படையாக உதாசீனமும் செய்யவில்லை.பிரஸிடண்ட் ஐயாவின் மகன் ஊர் கோணங்கியின் மகளை காவல் நிலையத்தில் மணந்து செல்லும் போது, ஊராரின் சாதி அடையாளங்களும் அதை ஒட்டிய மரபுகளும் மாறாது என்றும் தன் படிப்பை நம்பி எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறான்.அந்த தருணம், கிராமம் நிராகரிக்கப் படிகிறது.ஊராரின் இளம் மக்கள் திருப்பூர்க்கு ஆலை வேலை செய்ய அனுப்பப்படுவதும் கிராமத்து வறுமையின் நிதர்சனம். எத்தனை அழகான கிராமங்கள்.எப்படி எதோ காலத்தில் மாடிக்கொண்டு இருக்கின்றன.

நம் மனங்கள் கிராமங்களுக்காக ஏங்குகின்றனவா? இல்லை அவற்றில் இருந்து தப்பிக்க துடிக்கின்றனவா? நம் நகரங்கள் நமக்கு வேண்டிய சுதந்திரத்தையும் வாழ்கையையும் அளிக்கின்றனவா? இல்லை, நம்மை மேலும் தனிமையக்கி வேர்களிலிருந்து துண்டிக்கின்றனவா? இன்னும் பல கேள்விகள்.என்னை போன்று கிரமாங்களையே கண்டிராத சிறு நகர வாசிகளுக்கு, இந்த படம் ஒரு முழுமையான கிராமத்து அனுபவம்.

“குதிக்கிர குதிக்கிர குதிர குட்டி என் மனச காட்டுதே…….”

Posted in Movies | 1 Comment

இனி என் ரோட்டில் மழை தான்!

இனி என் ரோட்டில் மழை தான்.கடந்த ஒரு வார காலமாக பெய்து கொண்டிருக்கும் மழையே என்னை சற்று ஆயாசப் படுத்திவிட்டது.குதூகலமாக அலுவலகம் முடிந்து வெளியே வரும் பொழுது விழுந்து கொண்டிருக்கும் தூரலைப் பார்த்தால் ஏதோ ப்ரீ ஹிஸ்டோரிக் காலத்திற்கு சென்ற சந்தோஷம் கூடும்.முன்பு இருந்த பிராஜக்டில், நானும் பீனாவும் எட்டு மணி தாண்டி, வெளிச்சம் மறைந்து பெய்யக் கூடிய மழை எல்லாம் பெய்து முடிந்து வெளியேறும் போது எதோ விண்தளத்திலிருந்து பூமிக்கு திரும்பிய பிரமிப்பு இருக்கும்.ஒரு முறை மழை முடிந்து ஈரம் படிந்த தரையில் நடந்துக் கொண்டிருக்கும் போது சொன்னாள், ‘மழ தான் பெஞ்சிதா இல்ல, தண்ணி ஊத்தி கழுவிருக்காங்களா-நு கூட தெரில!’.சிறு சோகத்துடன் சிரித்து கொண்டோம்.இப்போது தீபாவுடன் வெளிச்சமும் மழையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்த போதும், பல நெருக்கடிகள்.கம்பனி சுவரைத் தாண்டி சாலையில் அடி எடுத்ததுமே தொடங்கிவிடும்.இத்தனை கம்பனிகள் அணிவகுத்து இருக்கும் இந்த பன்னெர்கட்டா சாலை மிகவும் குறுகியது.நைல் நதி போல.ஒல்லியான நீள பாதை.அதன் கரையில் தான் கார்பரேட் ஸிவிலைஸேஷனே தொடக்கம்.மாலை ஆறரை மணி தொடங்கி அது ஒரு நகரும் கார் பார்க்கின் லாட் ஆகிவிடும்.கம்பனி வாயிலிலிருந்து சாலையைக் கடந்தால் நேர் எதிரில் ஆட்டோ நிறுத்தம்.அங்கு சென்று ஆட்டோ நியாய விலைக்கு வாடகை பயணம் என்பது சாதாரண மாணவன் பணமோ மார்க்கோ இல்லாமல் பெரிய கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்று கேட்பது போன்றது.குறைந்தபட்சம் கையில் ஒரு லாப்டாப் பை இருக்கும் என்றால், உங்களையும் கொஞ்சம் மதித்து அட்டோ வேண்டுமா எனக் கேட்பார்கள்.அதுவும் மழைக் காலம் என்றால் எதுவுமே செல்லுபடியாகாது.பெருமதிப்புள்ள ஆட்டோ ஓட்டுனருக்கு நீங்கள் போக வேண்டிய இடம் பிடிக்க வேண்டும், அதற்கு குறைந்த பட்சம் இரண்டு மடங்கு பணம் கொடுக்க வேண்டும்.ஏனென்றால் அவர் உங்களை அடித்து செல்லும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றூம் வள்ளல்.டிராபிகில் தன் உயிரை பணயம் வைத்து கூட்டி செல்லும் ஹீரோ.அதற்கு நீங்கள் இரு மடங்காவது பணம் கொடுக்க வேண்டும் என்பது தர்மம்.இல்லை இல்லை, நான் கொஞ்ச தூரமாவது நடந்து, கடந்து செல்லும் ஆட்டோக்களை பிடித்துக் கொள்கிறேன் என்றால், தங்களுக்கு ஒரு வண்டர் லா அனுபவம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

பெங்களூரில் ‘பீச்’ இல்லை என்ற கவலையை பன்னெர்கட்டா சாலை பெருமனதுடன் தீர்த்து வைக்கிறது.ஒரு மாலை இவ்வழியாக நடை பாதையில் செல்ல வேண்டும்.சற்றே தூரியிருந்தால் போதும்.தெருவெங்கும் வெள்ளம்தான்.அலை வருவதற்க்கு கரையில் காத்து நிற்கும் அவலம் கூட இல்லை.நிமிடத்திற்கு ஒரு முறை உங்களை பேருந்து கடக்கும்போதெல்லாம், சாலையில் ஆடிபெருக்கென பொங்கும் தண்ணீர் தங்கள் பாதங்களை கழுவிச் செல்லும்.அதையும் தாண்டி அந்த சிறு சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் வரை சென்றுவிட்டால், இதோ இக்கரைக் கடந்தால் மீட்பர் வருவார் என்ற நம்பிக்கை மெலிதாக தோன்றும்.அங்குள்ள போலிஸின் அறிவுரைகளை எல்லாம் மீறி ஒரு ஹாரர் ரைடு போல அதையும் கடந்து நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தோம்.பெருமதிப்புள்ள ஆட்டோக்கள் கடந்து கொண்டே இருந்தன.ஒவ்வொருவரிடமும் இடத்தை சொல்லி பவ்யமாக நிற்கையில், தர்மத்திற்கு கேட்பது போன்ற பொருமையின்மையுடன் முகத்தை சுளித்து கடந்து செல்வார்கள்.சிலர் தம்மிடம் கொடுத்த கடனை கேட்டு துரத்துவது போல முகபாவமே இல்லாமல் கடந்து செல்வார்கள்.இன்னும் சிலர், நம்மை சந்திர மண்டலத்திற்கே கூட்டி செல்வது போல சாதாரணமாக அசாதாரண விலை சொல்வார்கள்.அப்போது தான் பெங்களூருக்கு ரஜினி எத்தனை அவசியம் என்று பட்டது.ஒவ்வொரு ஆட்டோவாக நிற்க வைத்து ‘நான் ஆட்டோக்காரன்’ பாட்டை பாடம் செய்ய சொல்ல வேண்டும்.காலையில் திறந்த வெளி பல் வினைத் தளமாக கண் குளிர பார்த்த அதே நடைபாதையில் மேலும் கால் வைக்க முடியாது மனம் சிக்கி, அங்கேயே உறைந்து நின்று விட்டோம்.அடுத்து யாராவது அவதாரம் தான் வந்து ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று காத்திருந்த போது ஒரு மெலிந்த மனிதர் ஆட்டோவில் மெதுவாக எங்கள் அருகில் வந்தார்.அப்போது கூட நான் நம்பவில்லை.பின் நாங்கள் ஏறி அமர்ந்ததும், நம்பிக்கை மிகுந்த கிருத்துவரான தீபா, தான் கடவுளிடன் பிரார்த்தித்துக் கொண்டதாக சொன்னார்! இனி எத்தனை பிரார்த்தனைகள் வேண்டுமோ!

Posted in Me n City, ramblings | Leave a comment

சுதேச மித்திரன்

தாத்தாவின் பழைய புத்தக பெட்டகத்தில் உதிர்ந்திருந்தது இந்த சுதேச மித்ரன் அட்டை படம்.தீவிரமாக பசியாறிக் கொண்டிருந்த கரையான் பூச்சிகளிடமிருந்து அகிம்ஸையாட்டு பிரித்து எடுத்து பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டேன்.அந்த அட்டையின் நகல் இது[ ஆயில் பேச்டெல்ஸ்].

லூயிஸ் காரலின் செஷையர் பூனைப் போல மிதக்கின்றது இந்த சிரிப்பு.அவரின் முகமே கரையான் அரித்து மறைந்தாலும், தவழ்ந்து கொண்டிருக்கும் சிந்தனை சிரிப்பு.

Posted in Gandhi, Glimpse, people, ramblings | Leave a comment

நம் விளம்பரங்கள்

நேற்று தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போது வழக்கம் போல விளம்பரங்களின் அணிவகுப்பு.ஓயாது பார்த்துக் கொண்டிருந்தேன்.சமீப காலமாக விவசாயிப் பள்ளிக்கூடங்கள் பற்றிய அரசு விளம்பரங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வருகின்றன.
ஆயிரக்கணக்கில் நேர்தியாக ஹுண்டாய் என அணிவகுத்து வரும் கார்கள், பள பள கூந்தலுடன் சிரித்துக் கொண்டுவரும் ஐஸ்வர்யா ராய், சூப்பர் மென் சேஷ்டைகளுடன் வோடஃபோன் பொம்மை, இவற்றிற்கு நடுவில் சட்டென்று பத்து வருடன் முன் எடுத்த தூர்தர்ஷன் சீரியல் போல இந்த விவசாயி விளம்பரங்கள்.எத்தனை மக்கள் இவற்றை கூர்ந்து கேட்கிறார்கள் என தெரியவில்லை.ஆனால், நான் சமீபத்தில் கவனித்த போது மிகுந்த மன சோர்வு ஏற்பட்டது.

காலையில் எழுந்து சிறுமி அம்மாவிடம் ‘பசிக்கிது மா’ என்கிறாள்.அம்மா பருப்பு வேக இன்னும் நேரமாகும் என்கிறாள்.அப்போது அங்கு வரும் அப்பா அரசு அளிக்கும் பருப்பு மானியங்களைப் பற்றி கூறுகிறார்.’இனி பருப்பு சீக்கிரம் வேகும்’ என்று சொல்லியவாரே, சிறுமியைத் தன் மடியில் வைத்து, ‘இனி நம்ம பிள்ளையும் நல்ல ஸ்கூலுக்கு போகும்.பெரிய ஆளா ஆகும்’ என்கிறார்.

அடுத்த விளம்பரம், ‘ஆ..நர முடி..இனி என் வாழ்கையே போச்சு…’….’கார்னியர் யூஸ் பண்ணுங்க.பத்திரமா பார்துக்குங்க’

‘ஸென்ஸிடிவ் பற்களா…ஸென்ஸோடென் யூஸ் பண்ணுங்க…’

யார் யார் எவற்றைப் பற்றிக் கவலைப்பட்டால் போதும் என்று சொல்லுவது போல இருக்கிறது.நாட்டின் பெரும் சதவிகித மக்களும் நல்ல உணவைப் பற்றியும் நல்ல கல்வியைப் பற்றியும் இன்னும் கவலைப்பட வேண்டும்.நம்மைப் போன்ற பிறர் சருமப் பொலிவு, சிகப்பழகு, நரை முடி……என அவரவர் தேவை/வசதிகு ஏற்ப கவலைப்பட வேண்டும்.

நம் நாட்டிற்கு நல்ல விளம்பரம்தான்.

Posted in ramblings | 2 Comments

கிகுஜிரோ-நந்தலாலா

சற்று முன் தான் கிடானோ-வின் ‘கிகுஜிரோ’ பார்த்தேன்.இப்போதுதான் மிஷ்கினின் ‘நந்தலாலா’வை நிராகரிக்க முழுமையான தகுதி கிடைத்த நிறைவு வருகின்றது.மொழிபெயர்ப்பை மட்டுமே வைத்து குறைகளை கண்டுகொள்வது கடினம்.குறை மொழியிலா நடையிலா இல்லை மொழிப்பெயர்த்தவரின் புரிதலிலா இல்லை மூலமே அவ்வாறு தானா என்று தெரியாது.’கிகுஜிரோ’ பார்த்தபின் ‘நந்தலாலா’ ஒரு மொழிபெயர்ப்புதானா என்ற சந்தேகம் வருகின்றது.அதன் நடையை மட்டுமே பிரதி எடுத்திருப்பதாக தோன்றுகிறது.ஏனென்றால், இரு படங்களின் சிந்தனை கோணங்களே வேறு.’கிகுஜிரோ’ குழந்தைகளுகும் வளர்ந்தவர்களுகும் இருக்கும் உலகம் வேறு வேறு அல்ல என்று அவற்றின் இடையே கிழிக்கப் பட்டிருக்கும் கோட்டை அழிக்கின்றது.குழந்தையே மனிதனின் தந்தை என்பதுபோல குழந்தைக்குள் இருக்கும் வளர்ந்தவனையும் வளர்ந்தவனுள் இருக்கும் குழந்தையையும் பக்கத்தில் வைத்துக் காட்டுகிறது.அப்படி வளர்ந்தவனுள் குழந்தைமை உயிருடன் இருக்க, அவன் ஒரு பைத்தியக்கார விடுதியில் இருக்க வேண்டும் என்பதில்லை.பைத்தியமாகவே இருந்தாலுமே அவன் பைத்தியக்கார விடுதியில் இருக்க வேண்டுமென்பதில்லை.

கதைக்கு வருவோம்.மாசௌ தன் பாட்டியுடன் தனியாக வாழ்கிறான்.பாட்டி வேலையையும் பார்த்துக் கொண்டு பேரனையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.அவன் அம்மா தொலைவில் இன்னொரு ஊரில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.பள்ளியில் கோடை விடுமுறை விடுகிறார்கள்.மசௌவிற்கு விளையாட யாரும் இல்லை.புட் பால் பயிற்ச்சி வகுப்புகளும் இல்லை.அவன் பக்கத்து வீட்டு நண்பர்களும் குடும்பத்துடன் விடுமுறை சுற்றுப் பயணம் செல்கிறார்கள்.பாட்டி வேலைக்கு சென்றதும், தனியாக வீட்டில் இருக்கும் மசௌ தற்செயலாக தன் அம்மா புகைப்படத்தைப் பார்க்கிறான்.அம்மாவைத் தேடி செல்ல ஆயத்தமாகிறான்.அம்மாவின் முகவரியும் கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டு கிளம்பும் போது தன் பகுதி வளர்ந்த பையங்களிடம் மாட்டிக் கொள்கிறான்.அங்கு வரும் அவன் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர் அவனைக் காப்பாற்றி விசாரிக்கிறாள்.தன் அம்மாவைப் பார்க்க செல்வதாக சொல்லும் சிறுவனைத் தன் வெட்டிக் கணவனுடன் அனுப்புகிறாள்.அவன் பணத்தை வாங்கிக் கொண்டு மாசௌவுடன் கிளம்புகிறான்.சிறுவனையும் அழைத்துக் கொண்டு அவன் முதலில் சூதாட செல்கிறான்.சிறுவனோ வளர்ந்தவன் துணையின்றி செல்லவும் முடியாமல் அவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறான்.கிகுஜிரோ எனும் அந்த வளர்ந்தவன் சிறுவனைப் போல உல்லாஸமாக பணத்தை செலவு செய்ய ஆரம்பிக்கிறான்.அவனும் சிறுவனும் நல்ல விடுதிகளுக்கு சென்று தங்குகிறார்கள்.மசௌவின் முகத்திற்காக வழியில் கிடைக்கும் அத்தனை உதவிகளையும் கிகுஜிரோ ஒரு சிறுவனைப் போல சந்தோஷமாக அனுபவிக்கிறான்.ஒரு கட்டத்தில் சிறுவனை அவன் அம்மாவிடன் கூட்டி செல்ல வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சி வர, கிகுஜிரோ அவனை அழைத்து செல்கிறான்.அங்கு மசௌவின் அம்மா வேறு ஒரு மனிதர் மற்றும் குழந்தையுடன் இருப்பதைக் கண்டு மசௌ உடைந்து போகிறான்.அதுவரை ஒரு முரட்டு சிறுவனாக இருந்த கிகுஜிரோ அவனை சமாதானப் படுத்துகிறான்.அது அவன் அம்மா இல்லை என்றும், அவள் வேறு இடத்திற்கு மாறிவிட்டதாகவும் அவள் அவனுக்காக ஒரு ஏஞ்சல் மணியைக் கொடுத்து சென்றிருப்பதாகவும் சொல்கிறான்.வழியில் சாலையோர கழிப்பறை முன், இருந்த இரு மோட்டர் சைக்கிள்காரர்களிடமிருந்த அந்த ஏஞ்சல் மணியை வாங்கி சென்று சிறுவனிடம் கொடுக்கிறான்.தனக்கு சோகமாக இருக்கும் சமயம் அதை அடித்தால் ஏஞ்சல் வருவாள் என்றூம் கூறுகிறான்.அதில் இருந்து இருவரும் நிகர் நிலைக்கு வருகிறார்கள்.கிகுஜிரோ தன் விளையாட்டுகளில் சிறுவனையும் சேர்த்து கொள்கிறான்.அங்கு காம்ப் செய்ய வந்த எழுத்தாளனும் மோட்டர் சைக்கிள் காரர்களும் சிறுவனை சாக்காக வைத்து தாங்களூம் சிறுவர்களாகவே மாறிவிடுகிறார்கள்.அவனுடன் சேர்ந்து பல விளையாட்டிகள் விளையாடுகிறார்கள்.மசௌவின் கோடை விடுமுறையும் விளையாட்டுடன் கழிகிறது.

இருவரும் மீண்டும் வீடு திரும்புகிறார்கள்.கிகுஜிரோ இன்னுமொருமுறை இதை செய்வோம் என்று சொல்லி விடைபெருகிறான்.படம், அந்த அழகிய இசையுடன் முடிகிறது.படம் பெரும்பாலும் சிரிக்கும் தருணங்களுடன் செல்கிறது.சிறுவனின் பார்வையிலிருந்து எங்கேயுமே ஆபாசம் இல்லை.சிறுவன் மிகையான சாமார்த்தியனும் இல்லை.வளர்ந்தவர் உலகில் தொலைந்து திகைத்து நிற்கும் சிறுவன் தான். வளர்ந்தவர் உலகில் வளர்ந்தபின்னும் திகைத்து நிற்கும் கிகுஜிரோவை சிறுவன் வளர செய்கிறான்.எல்லோரும் உள்ளே குழந்தையாக தான் இருக்கிறோம்.பலர் மறந்துவிடுகிறார்கள்.சிலர் மறைக்கப்பார்கிறார்கள்.ஆளில்லாத பஸ் நிறுத்ததில் கிகுஜிரோவும் சிறுவனும் இருக்கிறார்கள்.அங்கே ஒருவன் தன் மதிய உணவு பொட்டலத்துடன் வருகிறான்.கிகுஜிரோ அவனுடைய பொட்டலத்தை திருடி வைத்துக் கொள்கிறான்.அவன் போனதும் அதில் இருக்கும் உணவை தனக்கு ஒரு துண்டு சிறுவனுக்கு இரண்டு என்று பிரித்து தன்னுடையதை மறைத்து வைத்துக் கொள்கிறான்.மாசௌ ‘உனக்கு சாப்பிட?’ என்று கேட்க, ‘நான் வளர்ந்தவன்.உனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று தியாக வசனம் பேசிவிட்டு, மறைவில் சென்று தன் பங்கை சாப்பிடுகிறான்.

மொத்தத்தில் ‘நந்தலாலா’ கிகுஜிரோவின் பிரதி என்று நான் ஏற்க மாட்டேன்.அதன் நடையை மட்டுமே அது எடுத்துக் கொண்டிருக்கிறது.நீளமான பாதைகள், அமைதியான கணங்கள், தலை குனிந்த சிறுவனின் கிளோஸப் என்று அதன் நடையை மட்டுமே அது கடன் வாங்கியிருக்கிறது.மற்றபடி கிகுஜிரோ சிரிக்க வைத்த அளவு நந்தலாலா அழ வைத்தது.தன்னை கதை நாயகனாக காட்ட வேண்டி மிஷ்கின் பைத்தியக்கார பாத்திரமேந்தி கதையின் டிராமாவை அதிகரித்திருக்கிறார்.தன் பாட்டியையும் வீட்டையும் வேலைக்காரியையும் தானே கவனித்துகொள்ள வேண்டிய பொருப்புடன் சிறுவன்.நந்தலாலாவின் பயணம் பெரும்பாலும் அவலங்களைத் தாண்டி செல்கிறது.அதில் அன்பு என்பது உணர்ச்சி சிலிர்க்க துருத்திக்காட்டபடுகிறது.மனதை மெலிதாக அருப்பது போன்ற இசை. அன்பை சொல்ல இத்தனை வன்முறை தேவைதானா என்று புரியவில்லை.அந்த கலையிலும் ரசமும் பாவமும் உண்டு.எதைக் காண்பித்து எதை உணர்ப்பிக்க வேண்டும் என்ற இலக்கணம்.இரு கிராமங்களுக்கு இடையே சண்டை.அதில் ஒரு பெண் கற்பழிக்க படுகிறாள்.அவளை ஒரு பைத்தியக்கார விடுதியில் இருந்து தப்பியவன் காப்பாற்றுகிறான்.இதைப் பார்த்து நம் கண்களின் நீர் வருகிறது.ஏன்?உலகில் இன்னும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்றா? பெண்களை இப்படி பலவீனர்களாகவே வைத்திருக்கும் சமூகத்தில் வாழ்கிறோமே என்றா? இல்லை இதைத் தான் சினிமாவில் எங்கு முடிந்தாலும் சித்தரித்து நாயகர்களை நாயகர்களாக காட்டுவோம் என்ற இயக்குனர்களை நினைத்தா? பைத்தியம் என்பதை ஒரு சாக்காகவே கொண்டாடிக்கொண்டு மிஷ்கின் படம் முழுவதும் விரும்பப் படக்கூடிய பாத்திரமாக தன்னை சித்தரித்துக் கொண்டிருக்கிறார்.அவருடைய உடல் மொழியும் பாத்திரமும் எரிச்சல் ஊட்டக் கூடியதாகவே இருந்தது.குழந்தை மன நிலையிலேயே இருக்கக் கூடிய ஒரு மனிதன் அகி அம்மாவின் கற்பு மீறலைக் கண்டு ‘குணா’ கமல் போல வெதும்புவதும் அசௌகரியமாக இருக்கிறது.அதன் பின் அவர்கள் சந்திக்கும் பாலியல் தொழிலாளி. இத்தனை கதாபாத்திரங்கள் எதற்கு?இப்படத்தில் உள்ள குறியீடுகளை அலசியிருக்கிறார்கள்.எந்த பெரிய பின் நவீனத்துவ பாவனைகளும் அற்ற எளிமையான படம் ‘கிகுஜிரோ’.அதற்கு ஒரு மிகையான முக அலங்காரம் செய்ததுபோல,மலிந்த உதட்டு சாயமும் ஒரு இன்ச் பவுடரும் பூசி இருக்கிறார் மிஷ்கின்.ஏன் நாம் இதை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஏன் நம் படைப்பாளிகள் மீது நமக்கே இத்தனை பலவீனமான நம்பிக்கை? இதை நிராகரிக்கும் துணிவும் தெளிவும் நமக்கு தேவை.இல்லை என்றால் நாம் ஒரு கலை பாவனை மட்டுமே படைக்கும் படைப்பளிகளின் தலைமுறையை ஊக்குவிப்பவர்கள் ஆகி விடுவோம்.நம் மண்ணின் உண்மையான கலைஞர்களை நிராகரிப்பவர்கள் ஆகி விடுவோம்.

இது ஒரு மொழிபெயர்ப்பு படம் என்பதால் மட்டுமல்ல, மிஷ்கினின் முந்தய படமான ‘அஞ்சாதே’வும் கூட ஒரு பெரும் வன்முறை படமே,மனவியல் வன்முறை.நடைமுறையில் அத்தகைய குற்றங்கள் எத்தனை தூரம் நடக்கின்றன?அப்படியே அது யதார்த்தமாக இருந்தாலும், அதை காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன? இதிலும் ஏதேனும் குறீயீடை நான் பார்க்க தவறுகிறேனா?இத்தகைய படங்கள் நமக்கு அளிப்பது என்ன?

Posted in Movies, ramblings | 3 Comments

Glipmse : The Dawn and The Dog

As I come out of my Yoga class[yup, my yoga experience deserves another post], I see This Dog[ which is like every other dog in the city] right on the entrance of the class, sleeping soundly, with its tummy breathing deeply and rythmically and the day breaks as I come out to the street and the birds flock the morning sky and the sun starts smudging in the horizon.

I never disturb it nor get scared.I feel a great deal of love for it, rather for its sleep.The way it is embracing itself with such love and care and enjoy that sleep in the cold morning air.Maybe if it wakes up, it will have nothing worthy to do.

Posted in Glimpse, ramblings | 1 Comment

உப பாண்டவம்

நான் படிக்கும் எஸ்.ராவின் முதல் நாவல்.சேலம் புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.சுவாரஸ்யமான அட்டைப் படம்.சிகப்பு நிறப் பிண்ணனியில், முகம் மறைந்து, தலைகுனிந்து மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருக்கும் பெண்.அவளருகே அவளை நோக்கி கதைக் கேட்பது போல ஒரு சிறிய பறவை.கதையின் ஆழமான சஞ்சலங்களைக் குறிப்பது போலவே அந்த சிகப்பு நிற பிண்ணனி.எல்லா காலங்களிலும் கதை சொல்லிப் பறந்துகொண்டிருக்கும் இதிஹாஸ பறவை.எப்போதும் மாறாத கதை மையமாக,இருளின் மறைவில் பெண்.நாவலின் முக்கால்வாசி பாஞ்சாலியின் கதையாகவே விரிந்துள்ளது.பாண்டவர்கள் நல்லவர், கௌரவர் தீயவர்.எந்த ஒரு கதைக் கட்டத்திலும், பாண்டவரை நல்லவராக்கியாக வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே பாரதம் படித்து பழகிவிட்டிருந்தது.இந்த நாவல் ஒரு அழகிய பார்வை மாற்றத்தை அளித்ததோடு, முதன் முறையாக எனக்கு அதன் அரசியலையும் நுட்பமாக காட்டியது.

ஒரு காலப் பயணம் போலத்தான் கதையைத் தொடங்குகிறார்.ஒரு சிறிய கிராமத்தில் மஹாபாரதக் கூத்து நடக்கவிருக்கிறது.துரியோதனனின் சிதை உருவத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.துரியோதனன் வதம் காண மக்கள் கூடியிருக்கிறார்கள்.அங்குள்ள பெண்கள் அந்த துரியனின் சுதையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.அதைப் பார்த்து சுதை செய்பவன் சொல்கிறான், “சும்மா கிட்ட வந்து பாருங்க..துரியன் உங்க சகோதரனைப் போலத்தான் இருப்பான்…அர்ச்சினனைப் போல பொம்பளைக் கிட்ட கள்ளத்தனம் பண்றவன் கிடையாது”.அப்போது என் பள்ளியில் நாங்கள் நடித்த கர்ணன் நாடகம் நினைவிற்கு வந்தது.அதில் துரியோதனனாக நடித்த அக்கா, மிக அழகாகவும் கம்பீரமாகவும் இருப்பாள்.ஆனால், அர்ச்சுனன் பாத்திரத்திற்கு அத்தனை சிரமப்பட்டு ஆள் தேடவில்லை.ஒரு கோமாளித்தனமாக வரைந்த மீசையுடன் சிறிய உடல்வாகுள்ள ஒரு பெண்தான் நடித்தாள்.அதில் நான் திருதிராஷ்டிரனாக நடித்தேன். சபை அரியணையில் அமர்ந்து விட்டத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.அவ்வப்போது துரியோதனன் ஏதும் காலை அடித்து ஆவேசமாக பேசினால், தலை அசைத்து என் வறுத்தத்தை காட்ட வேண்டும்.பெரும்பாலான ஒத்திகைகளில், துரியோதனனை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன்.பாண்டவர்கள் மன சஞ்சலம் அற்ற அறத்தின் மனித உருவங்களாகவே சித்தரிக்கப் பட்டுவிட்டனர்.

இதில் நான் கண்டடைந்த புதிய புரிதல்கள் பல.பாண்டவர்கள் காண்டீவ வனத்தை அழித்து இந்திரபிரஸ்த்தம் கட்டுவது, ஒரு பெரிய இன ஒழிப்பாக, மிக விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது.அதில் உள்ள மிருகங்கள் வெடித்து சிதறுவதையும் அதன் குடிகள் நெருப்பில் வெந்து சாவதயும் படிக்கும்போது, பாரதம் ஒரு வரலாற்றுக் கோணத்தில் தெரிகின்றது.அந்த அழிவை வீர செயல்களாக செய்து முடிக்கும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் வேறு காலத்தை சேர்ந்த வரலாற்றுப் பாத்திரங்களாக தெரிகிறார்கள்.துரியோதனனின் கோவமும் மூர்கமும் அவன் தந்தையின் ஆற்றாமையின் சுய இரக்கத்தின் நீட்சியாக வருகிறது.’மந்திர’ சொற்களால் பிறந்த பாண்டவர்கள், அசாதாரணமானவர்களாகிறார்கள்.பல விளைவுகளும் அறமோ,ஊழ்வினையோ அன்றி மனிதர்களின் குற்றவுணர்வாலேயே நிகவழ்துபோல இருக்கின்றது.சகுனி, தன் தங்கையின் வாழ்வை பாழாக்கிவிட்டதன் குற்றவுணர்விலேயே தன் தேசத்தையும் குடிம்பத்தையும்விட்டு அஸ்தினாபுரத்திலேயே இருந்துவிடுகிறார்.தன் மருமக்களின் அகங்காரத்தைக் காப்பதிலேயே வாழ்வை செலவிடுகிறார்.

என் மனதை குடைந்து கொண்டே இருக்கும் கதை, ஏகலைவனின் கதை.அவன் கட்டை விரலை தக்ஷணையாக வாங்கிய துரோணரின் குரூரம்.அனால், இங்கு ஏகலைவன் தன் குற்றவுணர்வினாலே தானே மனமுவந்து விரலை அளிப்பதாக சொல்வது, ஆறுதலாக இருக்கிறது.அவன் தன் அகங்காரத்தால், ஒரு நாயின் வாயை மூடிவிடுகிறான்.அவன் தன் வித்தையைக் காட்ட ஒரு பாவமும் அறியாத நாயை வதைக்கிறான்.அந்த நாயின் நோவைக் கண்டு மக்கள் அவனை சபிக்கிறார்கள்.
கதை முழுவதும் திரௌபதி பகடையாடப் படுகிறாள்.நான் வசிக்கும் பகுதியில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.அங்கு திரௌபதி அம்மனாக நடுவிலும் பஞ்ச பாண்டவர்கள் ஒரு ஓரமாகவும், அம்மனின் நேர் பின்புறம் கிருஷ்ணரும் இருப்பார்கள்.ஒரு பகுதியில் வதைக்கப்பட்டு இறந்த பெண்களே சிறு தெய்வங்களாக வழிபட படுவாதாக படித்திருக்கிறேன்.அப்படிப் பார்த்தால், அதன் துவக்கமே திரௌபதி தான் போலத் தோன்றுகிறது.வாழ்க்கையே சூதாட்டம் என்றால், அதில் அறமும் தருமமும் எத்தனைக் கோமாளித்தனமாக இருக்கின்றன.தருமர் என்றுமே ஒரு பலவீனராகவே எனக்கு படுகிறார்.இறுதியில், சாவிலும் பாண்டவரைப் பிந்தொடர வேண்டியவளாக திரௌபதி தொடர்கிறாள்.

எஸ்ரா-வின் கட்டுரைகளைத் தான் படித்திருகின்றேன்.அவர் எழுத்துக்கள் ஒரு சீரான அமைதியான போக்கில் இருப்பதுபோலவே தோன்றும்.இந்த நாவல் அதே சீர்மை, அனால் கடலின் பேரமைதி போல, ரகஸிய போதனைப் போல இருந்தது.தினமும் பேருந்தில் செல்லும் அரைமணி நேரம் படிப்பேன்.ஒரு காட்சியுடன் அந்த நாள் அசைப்போட்டபடியே கழியும்.அடுத்து இரவு ஒரு மணி நேரம்.மீண்டும் வாசிக்க வேண்டும்.அதற்கு முன் வியாச பாரதம் முழுமையாக வாசிக்க வேண்டும்.

Posted in Books, S.Ramakrishnan | 1 Comment

Bursting out

It has been nine years since I decided to stop getting crackers.In my seventh standard, I burst few atom bombs.It was my life-time achievement, like a graduation[a slow and steady progress from only maththaappu to bijli to saram].The same diwali day,I had a trivial accident carrying an ever-silver ‘kodam’ and got stitches near my thumb joint.It was a heroic year.And content with my achievements that year, I decided that I had reached my heights of bravery  and decided to stop.Somehow the excitement of crackers got lost.And reasons mounted up for not getting crackers.Like, it is supporting child labor, not environment friendly, not safe, not worth the money.People always tell me that it is in our tradition to burst crackers the diwali dawn.’saastrathukku vedikkanum’! In which saastram is it quoted? Even so, do we even follow any saastram in other aspects?

I had not been propagating this no-cracker Diwali.It has been more of my personal choice.Since, I did have my own cracker- childhood, I was thinking its only fair that every kid must grow out of it on its own.But today, I really wish for a cracker-free diwali.Is it wrong on our part to go out on a Diwali evening to visit friends/relatives? Only this day, the roads become private property? It was already so dark, I could not make my way in the two-wheeler.Added to it is the horror of a dormant spark hiding at every house-front! The sudden thudder of a burst, the smoke and sparks arrowed at the trees.We do not have a clean and safe public infrastructure with the electric cables tangled at every other corner, roads like roller-coasters.A rocket-cracker with no guarantee that it’ll shoot off to sky is certainly not affordable on such roads! Why do people even bother to get these sky-works when they themselves cannot enjoy it? It is going to go somewhere off for some stranger’s sight and pleasure.This,to get something for others happiness and pleasure is so much unlike our people.

I somehow started wishing they put block-buster movies on TV, so that people would get inside! Not just the terror of the unexpected but also the junk/crap that gets all over the road and bumps your two-wheeler,it was a life-challenging journey for me  today, from my athai’s place to home.Pity the trees that have to stand man’s crazy pleasures.I feel now that this cracker-free diwali is worth a propaganda.

All our festivals are aimed at celebrating nature, make some time to give it the respect it deserves! We have turned our festivals into holidays given for indulgence.

From Aravindan Neelakandan’s article in http://www.tamilpaper.net/?p=1001

“பூமி ஒரு அதி-உயிரியாக அல்லது ஒரு பெரிய மகா-சிஸ்டமாகச் செயல்படுகிறது என்பதைக் கண்டடைந்தவர் ஜேம்ஸ் லவ்லாக். அவர் கூறுகிறார்:

நாம் நம்முடைய மனத்தையும் இதயத்தையும் மாற்றினால் ஒழிய நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த பூமிக்கு உயிர் உண்டு என்பதை உணரமாட்டோம். நாம் உருவாக்கும் மாற்றங்களையோ அல்லது மாற்றங்களை உருவாக்கும் நம்மையோ மறுதலித்து அந்த மாற்றங்களுக்கு எதிர்வினையாற்ற முடிந்த ஓர் உயிராக நாம் இந்தப் பூமியை உணரமாட்டோம். நாம் இந்தப் பூமியை ஓர் உயிருள்ள கிரகமாக, தன் தட்பவெப்பத்தையும் வேதியியலையும் மாற்றிக்கொள்ளும் சக்தி வாய்ந்த ஓர் உயிராக உணர்ந்தால் ஒழிய, இன்று அதை நம் மிகப்பெரிய எதிரியாக்கிவிட்டோம் என்பதை உணர்ந்தால் ஒழிய, நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் திட சங்கல்பம் நமக்கு உருவாகாது.

நரகாசுரன் புராணம் தன் இதயத்தில் கொண்டிருக்கும் செய்தியும் இதுதான். நம் அதிகார-மையப் பண்பாடு, நம் நுகர்வுக் கலாசார, லாப நோக்குப் பண்பாடு சிறையிட்டு வைத்திருக்கும் பெண்மை-மைய மதிப்பீடுகளை, நரர்களாகிய நாம் விடுதலை செய்யாவிட்டால், நம் அழிவும் நம் தாயாகிய பூமியின் எதிர்வினையால் நிகழும்.”

Posted in ramblings, Uncategorized | 8 Comments